Wednesday, February 8, 2012

பழைய பலத்துடன் யுவராஜினால் விளையாட முடியும்...!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் யுவராஜ் சிங்கின் நுரையீரலில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்று இக்கட்டியை அகற்றுவது தொடர்பில் சிகிச்சை பெற்றார் யுவராஜ். அங்கு பெறப்பட்ட அறிக்கைகளின்படியே யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

யுவராஜ் சிங்கிற்கு சிகிச்சையளித்துவரும் வைத்தியர் ஜதின் சௌத்தரி இது தொடர்பில் குறிப்பிடுகையில்...

”யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உண்மைதான். ஆனால் இது 100 வீதம் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய் என்பது ஆறுதலான விடயம். ஆகையினால் இவ்விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை. முறைப்படி சிகிச்சை பெற்றால் மே மாதத்திலிருந்து மீண்டும் புத்துணர்வுடன் யுவராஜினால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட முடியும். இது ஓர் அபூர்வமான புற்றுநோய் கட்டி. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டதால் இலகுவில் குணப்படுத்திவிடலாம்...” என்று கூறியுள்ளார்.

”நுரையீரலின் மேற் பகுதியில் - இதயத்திற்கு கீழாக இந்த புற்றுநோய் கட்டி காணப்படுகிறது. இதனால் அறுவைச் சிகிச்சை செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆகையினால் “கீமோ தெரபி“ எனப்படும் மருத்துவ சிகிச்சை மூலம் இக்கட்டியை கரைக்க முடியும்.

இந்த புற்றுநோய் கட்டியினை 100 விகிதம் அகற்றிவிட முடியும். அந்த சிகிச்சையினை யுவராஜ் சிங் - மார்ச் மாதத்தில் மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்படுகிறது. அப்படி அது சாத்தியப்படுமானால் ஏப்ரல் இறுதியில் யுவராஜ் குணமடைந்துவிடுவார். மே மாதத்திலிருந்து பழைய பலத்துடன் யுவராஜினால் விளையாட முடியும்...” என்றும் டாக்டர் சௌத்தரி மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment